Monday 18 January 2016

கண்களுக்கு விருந்து!

கட்டடக்கலையின் அழகினை, பிரம்மாண்டத்தை, விஸ்வரூபத்தை ஒரு முறை துபாயை சுற்றி வந்தால் போதும், உணர்ந்து கொள்ள‌லாம்!  உங்கள் கண்களுக்கு விருந்தாக இங்கே சில புகைப்படங்கள்!!

















 

Thursday 14 January 2016

பொங்கல் வாழ்த்துக்கள்!!

இனிக்கும் பொங்கலுடன்,
சுவைக்கும் கரும்புடன்
அனைவருக்கும் இனிமை பிறக்கட்டும்!!




மகிழ்ச்சியும் அமைதியும் புத்துணர்ச்சியும்
பொங்கும் பொங்கலாக பொங்கட்டும்!!
அனைத்து நலங்களும் வளங்களும் பெருகட்டும்!!




                      பொங்கலோ பொங்கல்!!
பதிவுலக சகோதர சகோதரிகட்கு அன்பார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!



 

Friday 8 January 2016

முத்துக்குவியல்-40!!!

அசத்திய முத்து:

மதுரையில் மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்கென்றே ஓசையின்றி இயங்கி வருகிறது உபகார்’  என்ற அமைப்பு. இதன் செயலாளரும் சிறப்புப் பயிற்றுனருமான ராதா ருக்மணி 1990ம் ஆண்டிலிருந்து இந்தப்பணிக்காக தன்னை அர்ப்பணித்து வ‌ருகிறார். பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தன் அமைப்பின் மூலம் கல்வி மற்றும் வாழ்வாதாரங்களை உருவாக்கித் தருகிறார் இவர்.
முதலில் இந்த அமைப்பு பார்வையற்றவர்களுக்காகத் தொடங்கப்பட்டது, பின்பு இது காது கேளாதோர், வாய் பேசாதோர் என்று பலதரப்பட்ட ஊனமுற்றோர்களுக்காக விரிவாக்கப்பட்டது.
இங்கே உடல் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று முதலில் அவர்களுடைய பெற்றோர்களுக்குத்தான் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதனால் வீட்டிலுள்ளோருடன் பார்வையற்றவர்கள் வாழ இயல்பான சூழ்நிலை ஏற்படுகிறது. இவர்கள் பள்ளி செல்லும் வயதடைந்ததும் அவர்களை இந்த அமைப்பு பொறுப்பேற்றுக்கொள்கிறது. அவர்களுக்கு மேலும் பயிற்சிகள் கொடுத்து மற்ற பள்ளிகளில் அவர்களை சேர்க்கிறது. இதற்காக அந்தப் பள்ளிகளில் இவர்களே சில சிறப்பு ஆசிரியர்களை பணியில் அமர்த்துக்கிறார்கள். 11 மாவட்டங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது மாநில, மத்திய அரசு உதவிகளுடன் இந்த திட்டம் அருமையாக நடந்து வருகிறது.கல்விக்கு அப்பாலும் தொழிற்கல்வி, விளையாட்டுக்கள் இவற்றிலும் இவர் பிரகாசிக்க வழி வகைகள் செய்யப்படுகின்றன.
இத்தனை நல்ல விஷயங்களிலும் திருமதி ராதாருக்மணிக்கு ஒரு வருத்தம் இருப்பதை மனந்திறந்து சொல்கிறார். ‘ பார்வையற்ற இளைஞர்களை மணக்க பல இளம் பெண்கள் முன்வருவது போல, பார்வையற்ற பெண்களை மணந்து கொள்ள இளைஞர்கள் முன்வருவதில்லல!!’

மருத்துவ முத்து:

சமீபத்தில் நான் மருத்துவர் ஒருவரை இங்கே சந்தித்தபோது அவர் ப்ருன் [PRUNE]
என்ற உலர்ந்த பழத்தை வாங்கி தினமும் இரண்டு சாப்பிடச் சொன்னார். அதற்கான காரணங்களை அவர் சொன்ன போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். இங்கே சுலபமாகக் கிடைக்கும் இந்தப் பழத்தை இத்தனை வருடங்களாக மிஸ் பண்ணியிருக்கிறேன் அதன் அருமை தெரியாமல்!! ப்ள்ம்ஸ் பழத்தின் ஒரு வகை இது.


 பல வகையிலும் இது பதப்படுத்தப்படுகிறது. முற்றிலும் உலராமல் சற்று ஈரப்பசையுடன் இருக்கும் இதன் உபயோகங்களைக் கேட்டால் நீங்கள் பிரமித்துப்போவீர்கள்!


இது இதயநோய் மற்றும் கான்ஸர் வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதுடன் இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை சீராக வைக்கிறது. எலும்புகளை அதிகம் தேயாமல் பாதுகாக்கிறது. வயதாகும்போது ஏற்ப்டும் முதிர்ச்சியைக் குறைக்க உதவுகிறது. இங்கெல்லாம் எல்லா கடைகளிலும் கிடைக்கும் இது நம் இந்தியாவில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் கிடைக்குமென்று நினைக்கிறேன்.

ரசித்த முத்து:

சென்ற வாரம் பிரபல இந்தித்திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்ஸாலி தயாரித்து இயக்கிய ‘ பாஜிராவ் மஸ்தானி ‘ என்ற திரைப்படம் பார்த்தேன்.




மிகப்பெரிய பிரம்மாண்டமான தயாரிப்பு இது. பழுப்பும் கருஞ்சிவப்பும் வெண்மையுமான வண்ணங்களில் படம் முழுவதும் ஒரு ஓவியம் போல படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் மராத்திய அரசில் பிரதம தளபதியாக மிகப்பெரிய செல்வாக்குடன் வாழ்ந்த பாஜிராவ் என்ற வீரனின் வாழ்க்கையில் இணைந்த மனைவியும் பின் அவன் மனதில் நுழைந்த பெண்ணும் அவர்களின் போராட்டங்களும் தான் கதை. வழக்கம்போல கதாநாயகனும் அவனின் மனதுக்கினிய பெண்ணும் இறுதியில் இறந்து போக, மனைவி தனியே நிற்க, படம் முடிகிறது. .. ..

மாட மாளிகைகளும் ஓவியங்களும் கண்ணாடி விளக்குகளும் பிரம்மாண்டமான அமைப்புகளும் சிலைகளும் காசிபாய் என்ற முதல் மனைவியின் நடிப்பும் இரண்டாவதாக வருன் மஸ்தானியின் கதக் நடனமும் அவரின் கண்களும் சோகமும் எல்லாமே அசத்துகின்றன.

படத்தில் ஒரு இடத்தில் மஸ்தானி கதாநாயகன் அறியாமல் அவனின் தர்பாருக்கு வந்து காதலுடன் இசைத்தவாறே நடனமாடும் காட்சி வரும். அந்த தர்பாரின் பிரமிக்க வைக்கும் அழகும் நடனமும் இசையும் அப்படியே நம்மை அசத்துகிறது. நீங்களும் அசந்து போக அந்தக் காட்சியை இங்கே இனைக்கிறேன். ரசியுங்கள்!!



பக்தி முத்து:

சித்தூருக்கு அருகே உள்ள வேப்பஞ்சேரி என்ற கிராமத்தில் உள்ள லக்ஷ்மி நாராயணர் கோவில் 250 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் உள்ளே 21 அடி தசாவதார சிலை உள்ளது. மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் ஒரே சிலையில் அமைந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.